பதினெட்டு வயதுவரை அந்த மண்ணில்தால் வளர்ந்தேன்.
பின்னர் வாழ்வின் பல பல நெருக்கடிகள்.
நொந்து நொடிந்து வெந்து வெற்றாகி உயிர் தவிர
எதுவும் அற்றுக் கிடந்த வேளை...,
உயிரைக் கையில் ஏந்தி மீண்டும் உயிர்த்து
ஊரைப் பிரிந்து உறவைப் பிரிந்து உற்றம் சுற்றம்
எல்லாம் பிரிந்தழுது வந்து நான் விழுந்த இந்த சுவிற்சர்லாந்து
தேசத்திலிருந்து கனவுகள்.....,
ஊர்,மக்கள்,நண்பர்கள். மரங்கள். மரங்களில். ஆலமரம்,அரசமரம்,வம்மிமரம், அனைத்துக்கும் அரிதாரமாய் அன்றைய பசிபோக்கி கிண்ணைமரம்,கிண்ணம் பழம் ,கோயில்கள்,கண்ணகி அம்மன்,பிள்ளையார்,முருகன்,நாகதம்பிரான்,ஆறு,ஓடை,கடல்,பழம்பள்ளி,காட்டுப்பள்ளி,நடுப்பள்ளி என்று பாடசாலைகள்,மறக்க முடியாத ஊரின் நினைவுகள் .....,மனிதர்கள் அப்பப்பா ஒவ்வொருவரின் இழப்பையும் அறிகையில் அந்தரத்திலிருந்து விழுவேன் .இறுதியாக இறந்த அருள் அண்ணன் இறப்பு வரை.....எல்லோரையும் போலவே!
ஒரு சிறு கிராமம் எங்கள் ஊர்.
ஆனால். கற்றவர்களின் களஞ்சியம்.
கல்வி சக ஆறு தான் கல்லாறு என்பார்கள்.
கல்லாற்றின் கோட்டை அது.
ஐந்து பக்கங்களும் நீரால் சூழப்பட்ட எமது கிராமம்
சுனாமியால் கூட அழியாது எனும் விஞ்ஞானம் அறிந்த
முன்னோர்களின் குடியேற்றத்தால் உருவானது என்று
முதியோர்கள் அன்று சொன்னபோது நம்பாத நான்,சுனாமி வந்தபோது நம்பினேன்.ஒரு உயிர்சசேதம் கூட சுனாமி எங்கள் ஊரில் உருவாக்கவில்லை.
சேரர்கள் கடல்வழியாக வந்து கடற்கோளும் அழிக்க
முடியாத வாழ்விடம் தேடிக் குடியேறி தங்களின் குலதெய்வமான
கண்ணகிக்குக் கோயிலும் கட்டி,அப்பிரதேசத்தில்
எங்குமே காணாத வினோத பாரம்பரியங்களுடன்
இவ்வூர் திகழ்வது எனக்கு இன்னும் ஆச்சரியமே!
வடசேரி,தென்சேரி என்று இரு பிரிவு ,ஏப்ரல் மாத த்தில்
தேங்காய் எடுத்துப் போராடி விழாக் காண்பதன் தொடர்ச்சி எங்கே என்று இன்றும் தேடுகிறேன்.
இது போல் இன்னும் பல எனது நினைவலைகளைத்
தட்டி உதைக்கின்றது,உள்பெட்டியில் வந்து சேர்ந்த பிரித்தானியா வாழ் எமது ஊர் மக்களின் அழைப்பிதழ்.
எனது பல ஆசான்களில் ஒருவரான கணித ஆசிரியர்
குமரன் அவர்கள் அனுப்பிய அழைப்பிதழ் கண்டதும்
எனது எண்ணங்கள் மேலே ஓடிற்று.
பிரித்தானியாவில் கோட்டைக்கல்லாறு மக்கள் ஒன்று கூடுதலையும்,ஊர் முன்னேற்ற நகர்வையும் முன்நிறுத்தி
உலகில் எங்கே இருக்கும் ஊரவர்களும் முடிந்தால்
அன்றைய தினம் கலந்து கொண்டு மகிழ்தல் நலம்
என்று வாழ்த்துகிறேன்.
"நான் இருப்பது சுவிஷில்,எனது ஆத்மா இருப்பது ஊரில்"
-கல்லாறு சதீஷ் -
 
Top