செ.பாஸ்கரன் ஆசிரியர் தமிழ்முரசு இணையத்தளம், அவுஸ்திரேலியா

„மலரும் முகம் பார்க்கும் காலம்'கவிதையின் இருபதாவது (20) கவிதையை எழுதியவர் அவுஸ்திரேலியா சிட்னியில் வசிப்பவரும் தமிழ்முரசு இணையத்தள ஆசிரியரும் படைப்பாளியுமான திரு.செல்லையா பாஸ்கரன் அவர்கள்.
அவரின் கவிதையை இம்முகநூலில் மகிழ்வுடனும் பெருமையுடனும் பதிவு செய்கின்றோம்.
இலக்கிய, இணையத்தள பணிகளுக்கு மத்தியிலம் எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதை முன்னெடுப்பில் தன்னை இணைத்துக் கொண்ட திரு.செல்லையா பாஸ்கரன் அவர்களுக்கு பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
வழமையான இணையத்தளங்களில் இவரின் கவிதை இன்று அல்லது நாளை பிரசுரமாகும்.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்.
வளர்பிறையாய் வாழ்ந்திடவே
வரவேண்டும் பொற்காலம்
மனம் ஏங்கித் தவிக்கிறது
மஞ்சள் வெய்யிலும்
மாலைநேரக் குளிர்காற்றும்கூட
மனதிற்கு மகிழ்வைத் தரவில்லை
நீ வருவாய் என்ற
ஒற்றைச் சொல் மட்டுமே
எனக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது
சுவாசிக்கும் காற்றில்கூட
உன் வாசத்தின் வருடல்கள்
விடுமுறையை எண்ணிப்பார்க்கும்
பள்ளிச் சிறுவனைப்போல்
உன் வருகைக்கான நாளை
சுவரெங்கும் கிறுக்கி வைக்கிறேன்
கிறுக்கலில் ஜனித்த ஓவியமாய்
நிஜத்தின் விம்பமாய் தெரிகிறது
மலரும் முகம்பார்க்கும் காலம்
பிரிவுத் துயரின் வலிகூட – இப்போ
மனதில் மழையாய் பொழிகிறது.
 
Top