கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் முன்னாள் வண்ணக்கர் சாமஸ்ரீ, தேசமாணி, அகில இலங்கை சமாதான நீதவான் திரு சாமித்தம்பி திருநாவுக்கரசு அவர்கள் தான் வண்ணக்கராக பதவி வகித்த காலத்தில் (2001 தொடக்கம் 2015/11/8 வரை) எமது கிராமத்துக்காக தன்னால் முன்னெடுக்கப்பட்ட  சில செயற்பாடுகளை எமது இணைய தளத்துடன் பகிர்ந்து கொண்டார்.

அவை:-

01. ஆலயம் சம்பந்தமானவை:-

1. சித்திவிநாயகர் ஆலயத்தினைப் புதிதாக அமைக்கப்படும் நோக்கத்தில் அதன் மூலஸ்தானப் பகுதிக்கு மாத்திரம் அத்திவாரம் இடப்பட்ட நிலையில் பொறுப்பெடுத்து வெளிநாடுகளில் வதியும் எமது கிராமத்தவர்கள், எமது கிராமத்திலுள்ள வசதி படைத்தவர்கள் போன்றோரை தொடர்பு கொண்டும் ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்களான பன்னிரண்டு குடித்தலைவர்கள் மூலம் பொதுமக்களின் நிதியையும் பெற்று இன்று தோன்றுகின்ற ஆகம விதிகளுக்கு அமைவான (மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், சபாமண்டபம், தம்பமண்டபம் உட்பட)பூரணத்துவமான ஆலயத்தினையும், நாகதம்பிரான், முருகன் (மண்டபத்துடன் கூடிய ) நவக்கிரகம், வயிரவர், சண்டேஸ்வரர் போன்ற பரிவார கோவில்களையும் அமைப்பித்தமையுடன் 2011இல் சிறப்பான கும்பாவிசேகமும் செய்து வைக்கப்பட்டமை.

2. பெரியதொரு வசந்த மண்டபமொன்றினை  வெளிநாட்டில் வதியும் எமது உறவினர் ஒருவர்   மூலம் ஏற்பாடு செய்து அமைப்பித்தமை.

3. ஆலயங்களுக்கு நிதிவழங்க முன்வராத புனர்வாழ்வுகள் அமைச்சு மூலம் அரச நிதியினைப் பெற்று  சித்தி விநாயகர் ஆலயத்துக்கான கவுடா ஒன்றை அமைத்தது.

4.கண்ணகை அம்மன் ஆலயத்தினை புனரமைத்து சுற்று மண்டபமும் அமைத்து கும்பாபிசேகமும்  செயவித்தமை

5.கண்ணகை அம்மன் சித்திவிநாயகர் ஆலயங்களுக்கு சொந்தமான வக்காத்தீவுக் காணியின் PLR பதிவு நாற்பது வருடங்களுக்கு மேலாக தனிப்பட்ட இரண்டு முஸ்லீம் விவசாயிகளான செய்கைக்காரர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையை  மீண்டும் எமது ஆலயங்களின் பெயருக்கு மாற்றி எடுத்தமை.
இதனால் ஆலயங்களுக்கான குத்தகையின் அளவு ஏறத்தாழ பத்து மடங்கு அதிகரிக்கச் செய்தமை.

6.கண்ணகையம்மன் சித்திவிநாயகர் ஆலயங்களுக்கு சொந்தமான காணியில் அமைந்துள்ள பொதுச்சந்தை வருமானத்தை தமதாக்குவதற்கு பலதடவைகள் இயக்கத்தின் மூலம் பிறிதொரு ஆலயத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு முகம் கொடுத்து ஈற்றில் பிரதேச சபை இவ் இரு ஆலயங்களுக்கு மாத்திரமே பொதுச் சந்தையினை குத்தகைக்கு வழங்கும் படி உறுதிகள் மூலம் ஆவணப் படுத்தியமை.

7.கண்ணகியம்மன் ,சித்திவிநாயகர் ஆலயங்களின் நிருவாகத்தின் கீழ் இயங்கிவந்த அம்பாரைவில் பிள்ளையார் ஆலயத்திற்கென தனியானதொரு நிருவாகக் கட்டமைப்பினை ஏற்படுத்தியமை.


02. கிராமம் சார்ந்தவை:-

1. பொதுச் சந்தைக்குரிய கட்டிட வசதிகளைப் பிரதேச சபையூடாக அமைத்துள்ளமை

2. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு பல்தேவைக்கட்டிடம் வழங்கிய நேரத்தில்  சுனாமித்தாக்கத்தினை காட்டி நான்கு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் நான்கு பல்தேவைக்கட்டடத்துக்கான வசதிகளைப் பெற்றாலும் பொருத்தமான காணி கிடைக்காததால் வடக்கு பிரிவைத் தவிர்த்து ஏனைய மூன்று கட்டடங்களையும் அமைத்தமை.

3. இப் பிரதேசத்திலுள்ள ஏனைய கிராமங்களின் அமைப்புகளுடன் போராடி எமது கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை கோபுரமொன்றை அமைத்தமை 

4. சுனாமியால் சேதமடைந்த வீதிகளை புனருத்தாபனம் செய்யும் திட்டத்தினூடாக எமது கிராம அமைப்புகளின் ஆதரவுடன் இரண்டாயிரம் மீட்டர் நீளமான எமது ஊர் வீதியினை(எல்லை வீதி) "கொங்கிறீற்" வீதியாக மாற்றியமைத்தமை.

5. சுனாமியால் சேதமடைந்த எமது கிராமத்தின் இரு பக்கத்திலும் உள்ள தாம்போதிகளை அவ் வேளையில் கடமையாற்றிய அரசாங்க  அதிபரை அடிக்கடி அணுகியதன் பேரில் திறமான இரண்டு பாலங்கள் அமைக்க ஏற்பாடு செய்தமை 

6. கோட்டைக்கல்லாறு கிராமத்திற்கென தனியான விளையாட்டு மைதானம் இல்லாத குறையினை கருத்திற்கொண்டு குளத்துப் பிரதேசத்தின் ஒரு பகுதியினை விளையாட்டு மைதானம் ஆக்குவதற்காக பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அமைத்தமை.

7. "உலக தரிசனம் " நிறுவனத்தின் மூலம் கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலயத்துக்கு மாடிக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தமை.

8. கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தின் வடக்குப்புற காணியின் ஓன்று கூடல் மண்டபமும் பாடசாலைக்கான மாடிக்கட்டடமும் அமைப்பதற்கான மேற்படி காணியினை கனடா வாழ் எமது கிராம மக்கள் மூலம் நிதியைப் பெற்று விலையாக வாங்கி வழங்கியமை.

9. கிராமத்தின் பெரும்பாலான ஒழுங்கைகளை மக்களுடன் பக்குவமாக பேசி வாகனங்கள் செல்லத்தக்க அளவுக்கு அகலமாகியமை 

10. எமது பொது மயாமத்தின் பெரும்பாலான பிரதேசத்தினை சில இளைஞர்கள் ஆக்கிரமித்து விளையாட்டு மைதானமாக உபயோகிப்பதால் பிரேதங்களை புதைப்பதற்கான பிரதேசம் வெகுவாக குறைந்துள்ளதுடன் புதிய குழிகள் அமைக்கப்படும் பொழுது ஏற்கனவே புதைத்த பிரேத எச்சங்கள் வெளிக்கொணரப்படுவதால் சுகாதாரக்கேடு எனப் பல தடவைகள் குறிப்பிட்டும் பலன் எட்ட வில்லை .எனவே இப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு இலண்டன் வாழ் எமது உடன் பிறப்புகள் மூலம் பிரேதங்களை எரிப்பதற்கான மின் உபகரணம் ஒன்றை எமது கிராமத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை.

11. மரண வீடுகளில் எமது கிராமத்து மக்கள் அனைவரும் பங்கு கொள்வதுடன் மரண வீட்டுக்காரருக்கு உதவும் வண்ணம்   நிதி சேகரிக்கும் நடைமுறை தங்கு தடையின்றித் தொடர வழிவகுக்கப்பட்டுள்ளமை.

12. எமது பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்காகச் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டமை.

13. சுகாதார விடுதிகள் இரண்டு சிறுவர் பூங்கா போன்றவற்றை அமைக்க துணை போனமை 

14. இறுதியாக கல்முந்தல் பிரதேசத்தில் ஒரு பஸ் தரிப்பு தங்குமிடத்தை பிரதேச சபை மூலம் அமைத்துள்ளமை.

என எமது கிராம வளர்ச்சியில் தனது சேவைக்காலத்தில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை பகிர்ந்து கொண்டார்.


வாசகர்களின் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன கீழே காணப்படும் COMMENTS BOX இல் தங்கள் கருத்துக்களை பதியவும்.

  


 
Top