அந்தாதி முறை எழுத்துவடிவத்தை இலங்கையில் முன்னணி எழுத்தாளர்கள் ஒருசிலர் இணைந்து ஆரம்பித்தாலும் கூட அது வெற்றிகரமாக அமையவில்லை. அதிலும் 10 உட்பட்டவர்களாக இருந்தும் எழுத்துக்கள் எதிர்பார்த்தபடி நகரவில்லை. ஆனாலும் எமது தொடர் 26 எழுத்தாளர்களை பல்லாயிரம் மைல் இடைவெளியில் இணைத்து வெற்றிகரமாக நகர்ந்திருக்கிறது.
நவீன கணனியூகம் இதற்கு உதவியது என்று வெறுமனே சொல்லிவிட முடியாது. அவற்றை எடுத்து, தொகுத்து,எழுத்துப்பிழைகள் பார்த்து,தரவேற்றம் செய்தாலும் எழுத்துகள் மாறி எழுத்துப்பிழைகள் மீண்டும் உருவாகும். முக்கியமாக இந்தப்பழுவைச் சுமந்தவர்கள் ஏலையா அவர்களும் திரு கிருஸ்ணமூர்த்தியுமே (பண்ணாகம் இணையம்) என்பதை யாரும் மறுக்க முடியாது.
கதை ஆரப்பித்த உடனேயே நேரடியாக கதாநாயகன் சுவிசுக்கு வந்து விடுகிறார். அகதிகள் சந்திக்கும் பெரும் துயர், இடர், வேதனைகள், சாவுக்கள், மரணவாழ்வுகள் பயணிக்கும் போதே நடைபெறுவது வழக்கம். ஆக இவை மீள்பார்வை ஊடாகவே பலநிகழ்வுகளை எழுதவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தும் கிளைக்கதைகளாக அவற்றை உள்வாங்காது கதை நகர்ந்திருக்கிறது.
இது ஒரு நெடுந்தொடராக இருந்தாலும் தொடர்ச்சியின்மை தென்படுகிறது. அதாவது சிறுகதைகளின் வலிந்த தொகுப்பாகவே காணமுடிகிறது.
எழுத்தாளர்கள் என்றும் தமது எழுத்து வழக்கிலேயே எழுதுவார்கள் ஆதலினால் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு கதையில் எழுத்துமுறை முறிவு தென்படும். இது தவிர்க்க முடியாததே. கதை பலநாடுகளில் இடம்பெற்றாலும் அந்த நாடுகளைப்பற்றிய அறிவூ போதாமையால் அந்நாடுகளில் தன்மை வரலாறுகளைத் தொடாமலே கதை நகர்கிறது.
அதாவது சூழலை போதியளவு உள்வாங்கவில்லை என்கிறேன். கதைகளில் அவசரமும் வர்ணனைக்குரிய கற்பனைக்குரிய பக்கங்களை குறைவாகவே உட்கொண்டிருக்கிறது. அதை நானும் செய்திருக்கிறேன். காரணங்கள் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் முடிக்க வேண்டிய தேவை இருந்தது. கதையின் முடிவுப்பகுதி அவரசப்பட்டு வலிந்து முடிக்க வேண்டும் என்பதற்காக முடிந்தது போல் அமைந்திருந்தது. அவரச அவரசமாக கலாவை யேர்மனிக்கு வரவழைத்து கல்யாணம் கட்டிவைக்க வேண்டிய ஒர் இக்கட்டை அவரசமுடிவு திணித்திருக்கிறது எனலாம்.
முடிவை நால்வரிடம் பகிர்ந்து நாலு முடிவுகளை எடுத்தமை மிகச்சிறப்பே. இருப்பினும் பொறாமையின் புழுக்கங்களை காணக்கூடியதாக இருந்தது.
ஒருகதையின் முடிவுடன் அனைவரும் உடன்பட முடியாது. அது அவரவரின் அறிவு அனுபவம், நோக்கம், போக்கு என்பற்றில் தங்கி உள்ளது. விமர்சனம் என்பது முக்கியமாக இரண்டு வகை கொள்ளும். 1) தட்டிக் கொடுப்பது 2) தட்டடிக் கொட்டுவது. என்னிடம் 3முடிவு பற்றி விமர்சிக்குமாறு கேட்டபோது நான் முதலாவதையே செய்தேன்.
கோழி முட்டை போட்டுவிட்டு கொக்கரிப்பது போல் சில விமர்சனங்களைச் சந்திக்க நேர்ந்தது மிக துயரமானதே. இருப்பினும் ஒருவரைத்தவிர பலர் எனது முடிவை வரவேற்று தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்ட வாழ்த்தினார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். இத்தொடருக்காக நான் பலமணி நேரங்கள் படப்பிடிப்பு தயாரிப்பு எடிட்டிங் எழுத்து என்று பலமணித்தியாலங்களை செலவிட்டுள்ளேன்.
காகத்துக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சுதான் அதற்கா கொக்கின் குஞ்சை கறுப்பு எனலாகாது. கதையின் முடிவு என்பது முழுக்கதையின் தொகுப்பல்ல என்பதையும் நாசுக்காகச் சொல்ல விரும்புகிறேன். அனைவரும் இறுதிக்கட்டத்தில் காட்டப்படவேண்டும் என்பது 1960 சினிமாப் போல் அமைந்து விடும். கதை கற்பனையாக இருந்தாலும் யதார்த்தங்களை ஜீரணித்து இருப்பது அவசியம் ஆகிறது. இல்லையேனில் இது புராணம் ஆகிவிடும். காதலித்த பெண்ணைத் திருமணம் செய்வதுதான் ஒரு மனிதனின் இலட்சியமா? இதற்காகத்தான் இத்தனை எழுத்தாளர்களும் சீலனுடன் ஓடினார்களா? இதுதான் இன்றைய வாழ்வின் பிரச்சினையா? ஒருவருடமாக ஒடியகதையின் முடிவு திருமணக் கனவா?
கிளைகதைகளில் கூட பத்மகலா மறக்கப்பட்டவளாக காணப்படுகிறாள். இவ்வழுக்களை பிழைகளைத் தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என என்மனதில் தோன்றியவற்றைத் தருகிறேன்.
3 பேர் கொண்ட கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட்டு கதையின் போக்கு கவனிக்கப்பட்டு, கலந்துரையாடப்பட்டு புதிதாக எழுதுபவரின் கவனத்துக்கு கிளைக்கதை ஓட்டங்களை உருவாக்கிக் கொடுக்கப்படும் போது எழுதுபவர் அதை கவனத்தில் கொள்வார்.
சம்பவங்கள் அனைத்தும் முழுமையாக முடிக்கவேண்டிய அவசியம் இன்றி அதன் தொடர்ச்சியை அடுத்தவரை முடிக்க விடுவது
கதை நீண்டு செல்வதால் ஒரு குறிப்பிட்ட தொடரின் பின்னர் ஒரு சுருக்கமான தொகுப்பைக் கொடுக்கலாம் உ.ம் 5 தொடரின் பின் 10வரிகளில் ஒருசுருக்கம்
இடைக்கிடை காணௌpகளைப் பயன்படுத்தலாம். (கற்பனை காணொளியை விட அபாரமானது இருப்பினும் நவீனம் எம்மை அழைத்து வந்திருக்கிறதே)
முகநூலில் உரையாடலுக்கான களம் ஏற்படுத்தப்பட்டும் அது பாவிக்கப்படவில்லை என்பது வேதனையானதே. தொடர் ஓடிக்கொண்டிருக்கும் வேளை உரையாடல் களத்தில் எழுத்தாளர்கள் அனைவரும் சந்தித்து கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளல் அவசியம். அளவளாவாவது ஒரு ஆரோக்கியமான புரிந்துணர்வூகளை ஏற்படுத்தும். இது புதியவர்கள் அதிகம் படிப்பதற்கும் அனுபவங்களைப் பகிர்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
இன்னும் எத்தனையோ எண்ணங்கள் உண்டு அவற்றை எல்லாம் எழுதினால் இது ஒருபெரும் கட்டுரையாகிவிடும்.
முக்கியமாக நான் சொல்லி முடிக்க விளைவது. இது ஒரு அபாரமுயற்சியே. இதில் தனியவே பாரத்தை இணைந்து சுமந்தவர்கள் சிலர் மட்டுமே. அவர்களுக்கு எனது சிரந்தாழ்த்திய நன்றிகளும் வணங்கங்களும்.
நோர்வே நக்கீரா( திலீபன் திருச்செல்வம்)