இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மட்/பட் கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலய மாணவர்களின் பெற்றோர் தங்களது நன்றிக் கடனை தாமதமின்றி செலுத்தியுள்ளனர். பரீட்சையில் மாணவர்கள் சித்திக்குப் பின்னால் இருந்து செயற்பட்ட கல்விப் புலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரையும் ஒன்றாக பாடசாலைக்கு அழைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டதுடன், நன்றியைத் தெரிவித்தும், மதியபோசன விருந்தளித்தும் கௌரவித்தனர்.21.09.2014 செவ்வாயன்று அதிபர் செல்வராசா தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இந் நிகழ்வு இடம் பெற்றது. சித்தியடைந்த மாணவர்கள் அதிதிகளை மலர் மாலை அணிவித்து, வரவேற்று மண்டபத்திற்கு அழைத்து வந்தனர். கலை விருந்துடன் மதிய விருந்தும் அளித்து அதிதிகளை மகிழ்வித்தனர். தரம் 2 மாணவி பு.சப்தனாவின் தனி நடனம் மார்கழி திங்கள் போல் அனைவரையும் வசீகரித்தது. வரவேற்பு மற்றும் கிராமிய நடனங்களும் கண்ணுக்கு விருந்து படைத்தது.இந் நிகழ்வில் கிழக்குமாகாண சபை உறுப்பினர் மா.நடராஜா, பட்டிருப்பு வலயகல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பிரதிகல்விப் பணிப்பாளர் ஞானராஜா, உதவிக் கல்விப் பணிப்பாளர் ரி.நடேசமூர்த்தி, கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் எஸ்.திருநாவுக்கரசு, வகுப்பாசிரியர்களான மேகலா நவரஞ்சிதம், பாடசாலை அபிவிருத்திச் சபை பிரமுகர்கள், சமூகசேவைகள் உயர் கல்விச்சங்க தலைவர் அகிலன், அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.












 
Top